Tuesday, March 22, 2011

ஒற்றைத் தலைவலி

உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகக்கூடும்.

அறிகுறிகள்:
தலைவலி விட்டுவிட்டு ஒரே பக்கத்தில் வரும். வலி கடுமையாக இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய வேலைகளை பாதிக்கும். தலையின் இரண்டு பக்கங்களில் அல்லது ஒரே பக்கத்தில் தோன்றி இன்னொரு பக்கத்திற்குப் பரவும். விண்விண் என அதிர்வோடு, பிசைவது போன்று, கண்ணையும் நெற்றியையும் அமுக்குவது போன்ற உணர்வுகளும், தலையில் ஏதோ ஒன்று கிளறுவது போனற உணர்வும் இருக்கும். வெளிச்சத்தை உற்றுப் பார்க்க முடியாது. சத்தம் கேட்டால் மிரட்சி உண்டாகும். திடுக்கிட வேண்டியிருக்கும். வாசனைகளை முகர்ந்தால் உடனடியாக அதிக உணர்ச்சி வசப்படும் நிலை. அதிகப்பசி, பசியின்மை, பார்வை மங்குதல், மூக்கடைப்பு, அடிவயிற்றில் வலி, சிறுநீர் அதிகரித்தல், மற்றும் முகச் சோகையால் தோலின் நிறம் மங்குதல் ஆகியவை காணப்படும்.படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.

வகைகள்
ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைப்படும்

1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)

தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.

தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.

நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.

கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

பொதுவான மைக்ரேன்: (Common migraine)

மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் திடீரென சுருங்குவதால் இரத்தக்குழாய் சுவர்களில் உண்டாகும் அழுத்தம் காரணமாக சுரக்கும் ரசாயனங்களால் மூளை வலியை உணர்கிறது.
ஒளிப்பட விளக்கம் இங்கே காண்க.

சிலர் ஒற்றைத் தலைவலி வரப்போவதை முன்பே எதிர்வு கூறுவார்கள், இதற்கு முன்னறிகுறியாக பார்வைப்புலன் தளத்தில் பளிச்சென்ற ஒளிக்கீற்றுக்கள், ஒளிவட்டம், குறுக்கு மறுக்கான ஒளிக்கோடுகள் அல்லது தற்காலிகமான பார்வையிழப்பு போன்றன தோன்றுவதாக கூறுவார்கள். பலருக்கு இந்த ஒளிக்கீற்றுகள்தோன்றாமலே தலைவலி தோன்றுகின்றது.இத்தலையிடி வருபவர்களுக்கு இது திரும்ப திரும்ப வருவதாக காணப்படுகிறது. அத்துடன் போதியளவு உணவு, உறக்கமின்மை, சில உணவுகளில் ஒவ்வாமை, ஏற்றுக்கொள்ளாமை, ஒளியின் அளவு ஹார்மோன்களினால் ஏற்படும் ஒழுங்கீனங்கள் (பெண்களில் மட்டும்) போன்றவை இதைப் பொறிதட்டிவிடும் . மேலும் மனவெழுச்சி (Anxeity), மனவழுத்தம் (stress) ஆகியனவும் காரணமாகலாம்.

அதிக சூரியவெம்பம், வானிலை அழுத்த மாற்றங்கள், காற்றோட்ட மற்ற புழுக்கமாக அறைகளில் தங்குதல், அடிக்கடி உறங்கும் முறையை மாற்றிக் கொள்ளுதல், வேலையிலும் ஓய்விலும் மாறுதல்களை உண்டாக்கிக் கொள்ளுதல், ஏதாவது ஓரிடத்திற்கு சென்றிருந்த போது தலைவலி வந்திருந்தால், அதே இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் செல்ல நேர்ந்தாலும் தலைவலி வருதல் மதுவகைகள் சில கீரைகள், பாலடைக்கட்டி, தயிர்,வினிகர்,சாக்லேட், ஆடு மற்றும் கோழி போன்றவற்றின் ஈரல், ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோன், மிக அதிகமான உறக்கம், உறக்கமின்மை, மிகைபசி, இறைச்சி, தலைவலி அடிபடுதல், உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள், அதிக மருந்து சாப்பிடுதல், மாதவிலக்கு, கர்ப்பம். மோசோசோடியம் குளுட்டாமேட், கவலை, மனஇறுக்கம், அசதி, வாய்வழி சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மைக்ரேன் தலைவலியை உண்டாக்குகின்றன.

ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?
ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. மற்றபடி, கட்டாயம் வரும் என்றும் சொல்லமுடியாது.

தாக்குண்டவர் துன்பத்தில் துடிக்க, சூழ இருப்பவரின் நோய் நீக்க முடியாத கையாலாகாத நிலை இன்னும் துன்பமானதாகும். சந்தோசமாக இணைந்து வாழும் இருவரில் ஒருவருக்கு இது வந்துவிட்டால், அவ்வுறவே பிரியுமளவுக்கு இந்நோய் பாதிக்கும். பெற்றோர்க்கு தலைவலி வந்துவிட்டால் சிறு பிள்ளைகள் குழப்பமடைந்து கவலைகொள்கின்றார்கள்.

உணவு¸ வாழ்க்கை முறை மாற்றங்கள்:
தாக்குதல் ஏற்ப்பட்டபோதான விபரங்கள் - நாள், நேரம், தாக்கின் கடுமைநிலை, கடந்த 24 மணி நேரத்தில் உட்கொண்ட உணவு போன்றவற்றை குறித்து வைத்துக்கொண்டால், தாக்குதலுக்கான தனிப்பட்டவருக்குரிய காரணிகளைக் கண்டுகொள்ளலாம். பின்னர் தெரிந்த காரணிகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

வராமல் காக்கும் வழிகள்:

அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். உங்களுக்கு உதவ சிலவழிகள்.

1. உணவுமுறையில் மாற்றம்:

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.சீனியளவு கூடிய உணவுகளைத் தவிர்ப்பதோடு குருதி வெல்லவளவு அதிகம் மாறுபடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். போதியளவு நீர் குடிக்கவேண்டும்.

2. முறையான தூக்கம்:

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

3. உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது. மன, உடலமைதிக்கான தியானப்பயிற்சியும் செய்யவேண்டும். தொடர்ச்சியான, திரும்பத் திரும்ப ஒன்றையே செய்யும் வேலைகளிலின்போது ஒழுங்கான சிறு ஓய்வுகள் எடுக்கவேண்டும்

4. சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5. மது, புகை, காபி தவிர்த்தல்

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7. தடுப்புமுறைகள்:

ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8. மருந்துகள்:

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். நோயின் தன்மை, நோயின் தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

மேலும் விபரம் அறிய http://yourtotalhealth.ivillage.com/migraines

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo