Thursday, March 17, 2011

ஜப்பான் சுனாமி

ஜப்பான் சுனாமி... பலி 20,000ஐ தாண்டியது; அச்சுறுத்தும் அணுக் கதிர்வீச்சு!டோக்கியோ, மார்ச் 13,2011
வடகிழக்கு ஜப்பானில் சுனாமிப் பேரலை தாக்கியதின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டியது. புதிதாக அணு உலையில் இருந்து கதிர்வீச்சு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஃபுகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் அச்சத்தை உண்டாக்கிய நிலையில், மற்றொரு அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலை உருகி, கதிர்வீச்சு பரவும் அபாயம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி நிலவரப்படி, ஏறத்தாழ 600 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் செண்டாய், ஃபுகிஷிமா மற்றும் மியாசகி ஆகிய பகுதிகளில் பலி எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி விட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மினாமிசன்ரிகு என்ற சிறு நகரின் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
கதிர்வீச்சு அபாயம்.. லட்சக்கணக்கில் வெளியேற்றம்..

இதனிடையே,  பூகம்பம் - சுனாமியின் காரணமாக, ஜப்பானின் அணு மின் நிலையம் ஒன்று சனிக்கிழமை வெடித்துச் சிதறியதால் பெரும் அச்சம் ஏற்பட்டது.  வடகிழக்கு ஜப்பானின் ஃபுகுஷிமாவில் உள்ள இந்த அணு மின் நிலையத்தில் உள்ள அணு உலை (எண் 1) பாதிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு உயிர்சேதம் ஏற்பட்டதாக இதுவரை செய்தி இல்லை.(செய்தி: ஜப்பான் சுனாமி: அணு மின் நிலைய வெடிப்பால் அச்சம்)

ஆனால், ஞாயிற்றுக்கிழமை புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஃபுகுஷிமாவில் உள்ள மற்றொரு அணு உலை (எண் 2) உருகி, வெடித்துச் சிதறும் ஆபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அணு உலையைத் தணிப்பதற்குரிய எந்திர சாதனத்தில் சரிசெய்ய முடியாத கோளாறு ஏற்பட்டுள்ளதால், அணு உலை உருகுவதற்கான அபாயமும், வெடிப்பதற்கான சாத்தியமும் உண்டென தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அந்த அணு உலை உள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 1,70,000 வெளியேற்றப்பட்டுவிட்டதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐ.ஏ.இ.ஏ தெரிவித்துள்ளது.

இந்தப் பேரழிவால், ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து 2,15,000 பேர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து உள்நாட்டு அகதிகளாகியுள்ளதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது.
தற்போது, சுனாமிப் பேரலையால் வீடுகளையும் கட்டடங்களையும் சூழ்ந்த தண்ணீர் வடிந்து வரும் நிலையில், மாடிகளின் மேற்கூரைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பான் சுனாமி... செய்தித் துளிகள்

* ஜப்பானில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் இது.
* வடகிழக்கு கடற்கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கின.

* கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவு.

* செண்டாய் நகரில் ஒரே நாளில் 300 சடலங்கள் மீட்பு.

* ஏறத்தாழ 400 பேர் காணவில்லை என்கிறது ஜப்பான் போலீஸ்.

* ஒட்டுமொத்த அழிவை மதிப்பீடு செய்வது இப்போதைக்கு மிகக் கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.

*  சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது.

* பகுஷிமா டேய்சி அணு உலை பாதித்ததால் மூடப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சுமார் 2000 பேர் வெளியேற்றம்.

* மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலையில் தீ விபத்து.

*  தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரிக்கை.

* பசிபிக் கடல் பகுதி நாடுகளில் சுனாமி எச்சரிக்கை. ஹவாய் தீவுகளை குறைந்த மீட்டரில் சுனாமி எழுந்ததால் பாதிப்பில்லை.

* லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலியிலும் சுனாமி எச்சரிக்கை.

டோக்கியோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 மைல்கள் ஆழத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான பூகம்பம், ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியிருந்தது.
கடலில் எழுந்த சுனாமிப் பேரலைகள் கப்பல்கள், கட்டடங்கள் என அடித்து துவம்சம் செய்தபடி நிலப் பகுதிகளை கடுமையாகத் தாக்கியது.
இந்த சுனாமி தாக்குதலுக்கு கடற்கரைப் பகுதியான செண்டாய் மிக அதிக பாதிப்புக்குள்ளானது.
இதன் தொடர்ச்சியாக ரஷ்யா, தைவான், இந்தோனேஷியா, ஹவாலி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டு வரும் சுனாமி காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சுனாமிப் பேரழிவால், ஜப்பான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சேதம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பசிபிக் கடலில் இருந்து எழும்பிய சுனாமிப் பேரலைகள் 13 அடி வரை மேலெழுந்து ஜப்பானின் கடலோர நகர் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அணு உலை நிலையங்கள், முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
டோக்கியோ, ஒசாகி, கியோடோ உள்ளிட்ட நகர்களில் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும், இந்தியாவுக்கு ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரழிவு பூகம்பங்கள்...

* ஜூலை 27,1976, தாங்ஷான், சீனா, பலி - 6,55,000 - ரிக்டர் 7.5
* டிச.26, 2004, சுமத்ரா, இந்தோனேஷியா, பலி - 2,27,898 - ரி9.1
* ஜன.12, 2010, ஹைத்தி, பலி - 2.22,570 - ரி7.0
* மே 12, 2008, சிச்சுவான், சீனா, பலி - 87,587 - ரி7.9
* அக்.8,2005, பாகிஸ்தான், பலி - 80,361 - ரி7.6
* மே 31, 1970 சிம்போத், பெரு, பலி - 70,000- ரி7.9
* ஜூன் 20, 1990, மஞ்சில், ஈரான், பலி - 40,000, ரி7.4
* டிச.26, 2003, பாம், ஈரான், பலி - 31,000, ரி6.6
* ஜன.26, 2001, குஜராத், இந்தியா, பலி - 20,023, ரி7.7
* ஆக.17 1999, இஸ்மித், துருக்கி, பலி - 17,118, ரி7.6
* செப்.30, 1993 லதூர், இந்தியா, பலி - 9,748, ரி6.2
* ஜன. 16, 1995, கோபே, ஜப்பான், பலி - 5,530, ரி6.9
- ஆதாரம்: USGS


0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo